அரசியல் சாசன பெஞ்சுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கை மாற்ற முடியாது- சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் பல்வேறு ஜாதியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தினேஷ் என்பவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார்.
மராட்டிய இட ஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்டு நீதிபதி இந்திரா சவுபே கூறிய தீர்ப்பில், 50 சதவீதற்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு மீறி உள்ளது.
எனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் மராட்டியம் தொடர்பான வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் முடிவு வரும் வரை தமிழகம் தொடர்பான இந்த வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது என்று கூறினார்கள்.