செய்திகள்
கங்கனா ரணாவத்

அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு- மும்பை கோர்ட்டு உத்தரவு

Published On 2021-03-01 20:21 GMT   |   Update On 2021-03-01 20:21 GMT
அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை:

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகைச் சாடிய நடிகை கங்கனா ரணாவத் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஹிருத்திக் ரோசனுடனான காதல் பிரச்சினையில் அமைதியாக இருக்கும்படி அவர் தன்னை மிரட்டியதாகக் கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கங்கனா ரணாவத் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து கூறிய கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 1-ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நடிகை கங்கனாவுக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை கங்கனா ரணாவத்துக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு கான் உத்தரவிட்டார். மேலும், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News