செய்திகள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்

Published On 2021-03-01 09:02 GMT   |   Update On 2021-03-01 09:02 GMT
தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
புதுடெல்லி:

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. 

இதுவரை 1 கோடியே 43 லட்சம் பேர் ஊசி போட்டுள்ள நிலையில், அடுத்து 2-வது கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஊசி போடும் பணி இன்று தொடங்கியது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதல் ஆளாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நர்சு நிவேதா ஊசி போட்டார். அவருக்கு முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது.

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கோவாக்சின் மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட பாரத் பயோடெக் ஆய்வாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 

இதையடுத்து பிரதமருக்கு நன்றி தெரிவித்து பாரத் பயோடெக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், சுயசார்பு இந்தியாவை கட்டியெழுப்ப பிரதமரின குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக கூறி உள்ளது. மேலும், கொரோனாவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்றும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் குறைந்த அளவிலேயே கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், பிரதமர் அந்த தடுப்பூசியை பயன்படுத்தியதால் மக்களிடையே மருந்து மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
Tags:    

Similar News