செய்திகள்
தேர்தல் பேரணியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பேரணியில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி நேற்று (பிப்ரவரி 28) நடந்தது.
இந்த நிலையில், மாபெரும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படுகிறது. இரு படங்களும் நேற்று நடைபெற்ற பேரணியில் எடுக்கப்பட்டவை என வலைதள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே புகைப்படங்களை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இதர அமைப்புகளும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றன. `மேற்கு வங்கத்தின் பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் கடல் அலை போல் காட்சியளிக்கும் மக்கள் கூட்டம். இது மேற்கு வங்க மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இது டெல்லி மற்றும் கொல்கத்தாவின் தூக்கத்தை கெடுக்கும்' எனும் தலைப்பில் பகிரப்படுகிறது.
வைரல் படங்களை ஆய்வு செய்ததில் அவை பிப்ரவரி 2019 ஆண்டு எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இவை பாராளுமன்ற தேர்தலுக்காக இடதுசாரிகள் சார்பில் நடத்தப்பட்ட இதேபோன்ற பேரணியில் எடுக்கப்பட்டவை ஆகும். நேற்றைய பேரணியிலும் அதிகம் பேர் கலந்து கொண்டனர். எனினும், வைரலாகும் புகைப்படங்கள் நேற்றைய பேரணியில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.