செய்திகள்
சிசிடிவி காட்சி

செயின் பறிப்பை தடுத்த இளம்பெண் குத்திக்கொலை- குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படை

Published On 2021-02-28 09:24 GMT   |   Update On 2021-02-28 09:24 GMT
தலைநகர் டெல்லியில் செயின் பறிப்பு முயற்சியை தடுக்க முயன்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் நேற்று இரவு இரண்டு இளம்பெண்கள் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் 2 வயது குழந்தையை வைத்திருந்தார். அப்போது, பின்னால் இருந்த வந்த ஒரு வாலிபர், கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணின் செயினை பிடித்து இழுத்துள்ளான். தடுத்தபோது, அந்தப் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டான். 

இதில், பலத்த காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொலையாளியைப் பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அப்பகுதியில் பலமுறை செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், ஆனாலும் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
Tags:    

Similar News