செய்திகள்
ரெயில்

குறுகிய தூர ரெயில்களில் கட்டண உயர்வு... ரெயில்வே கூறும் விளக்கம்

Published On 2021-02-26 03:59 GMT   |   Update On 2021-02-26 03:59 GMT
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக குறுகிய தூர ரெயில்களின் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி: 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்திய ரெயில்வே கடந்த ஆண்டு மார்ச் 22ம் தேதி முதல் ரெயில்களின் இயக்கத்தை நிறுத்தியது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் படிப்படியாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் சிறப்பு ரெயில்கள், பின்னர் தொலைத் தூரத்திற்கு செல்லும் ரெயில்கள் என்று படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, தற்போது குறுகிய தூர ரெயில்கள் வரை இயக்கப்படுகின்றன. 

இந்நிலையில், குறுகிய தொலைவு செல்லும் பயணிகள் ரெயிலின் கட்டணம் நேற்று முதல் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு ரெயில் பயணிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த கட்டண உயர்வு குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக கூறி உள்ளது. 

இதுதொடர்பாக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறுகிய தூர பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் குறைவான ரெயில்களுக்கு மட்டுமே இந்த கட்டண உயர்வு இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று பரவல் அபாயத்தை கருத்தில் கொண்டும், அதிகளவில் மக்கள் ரெயில் பயணங்களை தவிர்க்கவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களின் உயர்வு 30 முதல் 40 கி.மீ வரை பயணிக்கும் பயணிகளுக்கு பொருந்தும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறுகிய தூர பயணத்திற்கு மட்டும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News