செய்திகள்
கோப்புப்படம்

பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

Published On 2021-02-26 02:03 GMT   |   Update On 2021-02-26 02:03 GMT
பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதுடெல்லி:

விவசாயிகள் போராட்டத்தை வைத்து சமீபத்தில் ‘டுவிட்டர்’ மூலம் பொய் தகவல்கள் பரப்பப்பட்டன. அத்தகைய 1,500 டுவிட்டர் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. சில நாட்கள் தாமதத்துக்கு பிறகே ‘டுவிட்டர்’ நிறுவனம் அந்த உத்தரவை அமல்படுத்தியது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும், விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிடும் வகையில், டுவிட்டர் மூலம் சதித்திட்டம் பகிரப்பட்டது. இதுதொடர்பாக சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.

இந்த பின்னணியில், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக வலைத்தளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதை கண்டறியும் வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும்.

புகார்களை விசாரிக்க சமூக வலைத்தளங்கள் ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும்.

புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஜீ5 உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கடிவாளம் போடும்வகையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓ.டி.டி. தளங்கள், மின்னணு ஊடகங்கள், அவற்றில் செய்தி வெளியிடுபவர்கள் ஆகியோருக்கும் நடத்தை நெறிமுறைகள் பொருந்தும். ஓ.டி.டி. தளங்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை யார் யார் பார்க்கலாம் என்பதற்காக வயது அடிப்படையில் 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்.

யு பிரிவு (அனைவரும் பார்க்கலாம்), யு/ஏ 7+ (பெற்றோர் வழிகாட்டுதலுடன் 7 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம்), யு/ஏ 13+, யு/ஏ 16+, ஏ (வயது வந்தோர் மட்டும்) ஆகிய 5 பிரிவுகளாக வகைப்படுத்த வேண்டும்.

யு/ஏ 13+ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை பெற்றோர் முடக்கி வைக்கும் வசதி அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், அது எதைப்பற்றியது, எந்த வயதினர் பார்க்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன்மூலம் அதை பார்க்கலாமா, வேண்டாமா என்பதை பொதுமக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

அதுபோல், மின்னணு ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள், இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகையாளர்களுக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேபிள் டி.வி.நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டத்தையும் பின்பற்ற வேண்டும்.

அத்துடன், மூன்றடுக்கு குறைதீர்ப்பு நடைமுறை உருவாக்கப்படும். அந்த நடைமுறை, ஓ.டி.டி. தளங்களுக்கும், மின்னணு ஊடகங்களுக்கும் பொருந்தும். இது, சுயமாக ஒழுங்குபடுத்தும் முறை ஆகும்.

புகார்களுக்கு தீர்வு காண வெளியீட்டாளர்களே ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். புகார் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.

வெளியீட்டாளர்கள் இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கண்காணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News