செய்திகள்
இந்தியாவில் புதிய பாதிப்பு அதிகரிப்பு- சிகிச்சை பெறுவோர் மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,738 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,46,914 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 138 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,705 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,38,501 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,799 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.21 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,51,708 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திற்கு கீழ் இருந்த நிலையில், இன்று மீண்டும் 1.5 லட்சத்தை தாண்டி உள்ளது.
நாடு முழுவதும் நேற்று வரை 1,26,71,163 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 5,03,947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.