செய்திகள்
மாநகராட்சி தேர்தலில் அமோக வெற்றி: குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி
குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது.
6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 33 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. இதர கட்சிகள் 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
அகமதாபாத் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 192 இடங்களில் பாஜக 101 இடங்களிலும் காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பாவ் நகர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 இடங்களில் பாஜக 31 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜாம்நகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 64 இடங்களில் பாஜக 43 வார்டுகளிலும், காங்கிரஸ் 6 வார்டுகளிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 வார்டுகளில் பாஜக 68 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
வதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில் பாஜக 69 வார்டுகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 7 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது
‘‘மிக்க நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர். நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. பாஜக மீது மக்கள் மீண்டும் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். குஜராத்திற்கு சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளனர்’’ எனக் கூறியுள்ளார்.