கொரோனா பரிசோதனையை அதிகரிக்க 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி:
நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்து வருகிறது.
எனவே பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கேரளா, மராட்டியம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். முறை பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 74 சதவீதம் பேர் கேரளா மற்றும் மராட்டியம் மாநிலத்தில் உள்ளனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கேரளாவில் வாராந்திர கணக்குப்படி 13.8 சதவீதம் வரை நோய் பரவல் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில் தாக்கம் மோசமாகி வருகிறது. அதேபோல மராட்டியம் மாநிலத்தில் வாராந்திர கணக்குப்படி பாதிப்பு 18 ஆயிரத்து 200-லிருந்து 21 ஆயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.
மும்பை புறநகர் பகுதி, நாக்பூர், அமராவதி, நாசிக், அகோலா, யவத்மால் ஆகிய பகுதிகளில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல பஞ்சாப்பிலும் சமீப காலமாக நோய் தொற்று கூடுதலாகி வருகிறது.
எனவேதான் மத்திய அரசு கொரோனா பரி சோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே நோயை கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.