செய்திகள்
கைது

அதிக வட்டி தருவதாக கூறி 80 பேரிடம் மோசடி... 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய பலே ஆசாமி

Published On 2021-02-21 07:11 GMT   |   Update On 2021-02-21 07:11 GMT
போலி நிறுவனங்கள் தொடங்கி அதிக வட்டி தருவதாக கூறி 80 நபர்களிடம் பண மோசடி செய்த நபர் சிக்கி உள்ளார்.
புதுடெல்லி:

போலியான முதலீட்டு திட்டங்கள் மற்றும் கடன் பத்திர சான்றிதழ்களை காட்டி நாடு முழுவதும், 80க்கும் மேற்பட்ட மக்களிடம் ரூ.8 கோடி அளவில் பணம் வசூல் செய்த கோபால் தளபதி (வயது 41) மற்றும் அவரது கூட்டாளிகள், திடீரென தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறைவாகினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கோபால் தளபதியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து போலியான இரண்டு நிறுவனங்களை தொடங்கி, அதில் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் வருமானம் கிடைக்கும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி விளம்பரம் செய்ததும், அதனை நம்பிய பலர் பணத்தை கொடுத்து ஏமாந்திருப்பதும் தெரியவந்தது. 

முக்கிய குற்றவாளியான கோபால் தளபதியின் கூட்டாளிகளில் 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கோபால் தளபதி 3 ஆண்டுகளாக போலீஸ் பிடியில் சிக்காமல் அடிக்கடி தனது இருப்பிடத்தையும், உடல் தோற்றத்தையும் மாற்றி தலைமறைவாக இருந்தார். அவரது கூட்டாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், கோபால் தளபதியின் இருப்பிடத்தை போலீசார் அறிந்தனர். அதன்படி, வியாழக்கிழமையன்று டெல்லி சாகெத் கோர்ட் வளாகம் அருகே கோபால் தளபதியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இத்தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News