செய்திகள்
சோபியான் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள சூழ்நிலைகளை அறிந்துகொள்வதற்காக வெளிநாடுகளின் தூதர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில், சோபியான் மாவட்டம் பதிகாம் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
நீண்ட நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பத்காம் மாவட்டம் பீர்வா பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.