செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

விலங்கு வதை சட்டத்தில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2021-02-17 02:07 GMT   |   Update On 2021-02-17 02:07 GMT
நீலகிரி காட்டு யானை கொல்லப்பட்டதை போன்ற சம்பவங்களைத் தடுக்க விலங்குவதை சட்டத்தில் திருத்தம் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுத்துவிட்டது.
புதுடெல்லி:

கேரளத்தில் வெடிபொருள் வைத்த அன்னாசிப்பழத்தை உண்ட கர்ப்பிணி யானை கடந்த ஆண்டு உயிரிழந்தது. இதையடுத்து, விளைநிலங்களுக்குள் புகும் காட்டு விலங்குகளை விரட்ட வைக்கப்படும் வெடிபொருட்கள், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துதலை சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுபம் அஸ்வதி என்பவர் மனு தாக்கல் செய்தார். அது தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு, தமிழக, கேரள அரசுகள் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பதிலளிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மேத்யூஸ் ஜெ நெடும்பறா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீலகிரி மாவட்டம் மசினகுடியில் காட்டு யானையை கொடுமைப்படுத்தும் வீடியோ, காண்போரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது. கேரளத்தில் வெடிபொருள் வைத்த அன்னாசிப்பழத்தை உண்ட கர்ப்பிணி யானை கடந்த ஆண்டு உயிரிழந்தது. இதற்கிடையே மேலும் ஒரு யானை கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவம், இதுபோன்ற விவகாரங்களில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகள் போதுமானவையாக இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கிடையில், காட்டு விலங்குகளை கொடுமைப்படுத்தும் சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ரிசார்ட்டுக்கு வந்த காட்டு யானை கொடுமைப்படுத்தி கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களை தடுக்க ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாக கருதும் வகையில் அவசர சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மேத்யூஸ் ஜெ நெடும்பறா பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் மனு செய்யுங்கள். பொதுநல மனுவை கொண்டு எவ்வித உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க முடியாது. இதுபோன்ற விவகாரங்களை ஐகோர்ட்டு விசாரித்தால்தான் சரியாக இருக்கும். காட்டு விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2020 அக்டோபர் 14-ந் தேதி ஏற்கனவே போதுமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News