செய்திகள்
மந்திரி சுரேஷ்குமார்

மந்திரி சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி

Published On 2021-02-15 01:43 GMT   |   Update On 2021-02-15 01:43 GMT
கர்நாடக பள்ளிக்கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி செய்த, மர்மநபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு :

கர்நாடகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதன்மூலம் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன.

சமீபத்தில் கூட பா.ஜனதா தேசிய செயலாளர் பி.எல்.சந்தோசின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய மர்மநபர்கள், சந்தோஷ் புகைப்படத்தை முகநூலில் முகப்பு பக்கத்தில் வைத்ததுடன், சந்தோசுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மந்திரி ஒருவரின் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கி பணமோசடி செய்த சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக பள்ளிகல்வித்துறை மந்திரியாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இந்த நிலையில் சுரேஷ்குமார் பெயரில் முகநூலில் போலி கணக்கு தொடங்கிய மர்மநபர்கள், சுரேஷ்குமாரின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தின் முகப்பில் வைத்து உள்ளனர். பின்னர் சுரேஷ்குமார் பேசுவது போல அவரது நண்பர்களிடம் பேசி பணம் பெற்று மோசடி செய்து உள்ளனர். இதுபற்றி அறிந்த சுரேஷ்குமாரின் தனி செயலாளர் பி.ஏ.சிதம்பரம் என்பவர் மர்மநபர்கள் மீது சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News