செய்திகள்
மீட்பு பணி

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு- இதுவரை 40 உடல்கள் மீட்பு

Published On 2021-02-14 04:21 GMT   |   Update On 2021-02-14 04:21 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
டேராடூன்:

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆற்றில் கலந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தபோவன் அணை, அருகேயிருந்த ரிஷிகங்கா மின்நிலையம், சுற்றியிருந்த வீடுகள் ஆகியவை பாதிப்படைந்தன. மின்நிலையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர், சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 
 
நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்களும் அடங்குவர். 

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 164 பேரை காணவில்லை எனவும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

தபோவன் சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பல்வேறு முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், சுரங்கத்தில் துளையிட்டு கேமராவை செலுத்தி, அதன் மூலம் அவர்களை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக துளையிடும் பணி நடைபெறுகிறது. 
Tags:    

Similar News