செய்திகள்
நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்- காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ் வழங்கினார்
ராகுல் காந்தியை டூம்ஸ்டே மனிதர் என்று விமர்சித்த நிதி மந்திரிக்கு எதிராக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருகிறார்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் பேசியபோது, ராகுல் காந்தி நாட்டை இழிவுபடுத்தும் விதமாகவே பேசி வருவதாகவும், போலியான கட்டுக்கதைகளை உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், நாட்டின் அழிவுக் காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை மனிதராக (இந்தியாவின் டூம்ஸ்டே மனிதர்) ராகுல் மாறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவின் டூம்ஸ்டே மனிதர் என்று ராகுல் காந்தியை விமர்சித்தமைக்காக, நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரக்கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. பிரதாபன் இந்த நோட்டீசை கொடுத்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக நிதி மந்திரி கூறிய கருத்துக்களுக்கு காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவைக்குள் இதுபோன்ற பாராளுமன்ற விரோத நடவடிக்கைகளில் நிதி மந்திரி ஈடுபடக்கூடாது, உடனடியாக, அவர் கூறிய கருத்துக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.