செய்திகள்
சிறுத்தைப்புலிகளை பார்வையிடும் கண்ணாடி கூண்டை ஊழியர் ஒருவர் கிருமி நாசினியால் சுத்தம்செய்த காட்சி.

15-ந் தேதி முதல் பைகுல்லா ராணி பூங்கா திறப்பு

Published On 2021-02-13 01:56 GMT   |   Update On 2021-02-13 01:56 GMT
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 15-ந் தேதி மூடப்பட்ட பைகுல்லா ராணி பூங்காவை வருகிற 15-ந் தேதி முதல் திறக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாாி கூறியுள்ளார்.
மும்பை :

மும்பை பைகுல்லாவில் பிரபல ராணி உயிரியல் பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்கா கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 15-ந் தேதி மூடப்பட்டது. அதன்பிறகு திறக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் பூங்கா மூடப்பட்டு 11 மாதங்கள் ஆன நிலையில் அதை திறக்க நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், வரும் 15-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பூங்காவை திறக்க திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, "பூங்கா திறப்பது தொடர்பாக மாநகராட்சியிடம் ஒப்புதல் கேட்டு உள்ளோம். மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் ஒப்புதல் அளித்தவுடன் பூங்கா திறக்கப்படும்" என்றார்.

ராணி பூங்கா மும்பையில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு தலம் ஆகும். அங்கு புலி, சிறுத்தைப்புலி போன்ற விலங்குகளும், பென்குயின் மற்றும் சுமார் 200 அரியவகை பறவைகளும் உள்ளன. தற்போது பூங்கா திறக்கப்பட்டாலும் பறவை காய்ச்சல் பரவல் காரணமாக பறவைகளை பார்வையிட முடியாது எனவும் அதிகாரி ஒருவா் கூறினார்.

ராணி பூங்காவுக்கு தினமும் சுமாா் 6 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள். வார விடுமுறை நாட்களில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News