செய்திகள்
நடமாடும் கொரோனா பரிசோதனை ஆய்வகம்: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்
மராட்டியத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை ஆய்வகத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்.
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ், ஒர்லியில் உள்ள இந்திய தேசிய விளையாட்டு மையம், கோரேகாவ் நெஸ்கோ ஆகிய இடங்களில் நடமாடும் கொரோனா ஆய்வகத்தை அமைத்து உள்ளது.
இந்த 3 நடமாடும் ஆய்வகத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
புதிய வகை கொரோனா ரைவஸ் பரவுவதால் அரசு தொடர்ந்து சோதனை, கண்டறிதலை அதிகப்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருகிற போதும், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் அவசியம் ஆகும். எனவே சோதனையை அதிகரிக்க நடமாடும் ஆய்வக வசதி மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடமாடும் ஆய்வகத்தில் பொதுமக்களுக்கு ரூ.499 கட்டணத்தில் கொரோனா சோதனை செய்யப்படும். ஒருநாளில் அங்கு சுமார் 3 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த ஆய்வகங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை ஆகும்.