செய்திகள்
மோப்ப சக்தியால் நொடிப்பொழுதில் கொரோனாவை கண்டறியும் நாய்கள் -செயல்விளக்க வீடியோ
இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு கொரோனாவை கண்டறியும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சிறுநீர் மற்றும் வியர்வை மாதிரிகளை வைத்து கொரோனா தொற்றை கண்டறிதவற்கு, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் வகை நாய்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சி நல்ல பலனை கொடுத்துள்ளது. டெல்லி மற்றும் சண்டிகர் முகாம்களில் இதுவரை 3806 வீரர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மோப்ப சக்தி மூலம் கொரோனா தொற்றை கண்டறிவது தொடர்பாக செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், காஸ்பர் என்ற பெயருடைய காக்கர் ஸ்பேனியல் வகை நாய், நொடிப்பொழுதில் கொரோனா பாதிப்பு உள்ள மாதிரியை அடையாளம் காட்டி வியக்க வைத்தது. இதேபோன்று பயிற்சி பெற்ற சிப்பிப்பாறை வகை நாய்களான ஜெயா, மணி ஆகிய நாய்களும் உடனிருந்தன.
#WATCH | Delhi: Indian Army dogs have been trained for real-time detection of COVID19. Cocker Spaniel named Casper seen participating in a live demonstration. Jaya and Mani, two dogs of indigenous breed Chippiparai, were also present. pic.twitter.com/18YdHX9Xfw
— ANI (@ANI) February 9, 2021
மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் கர்னல் சுரேந்தர் சைனி இதுபற்றி கூறுகையில், ‘வியர்வை மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பயன்படுத்தி கொரோனாவைக் கண்டறிவதற்கு இந்திய ராணுவ நாய்கள் பயிற்சி பெற்றிருக்கின்றன. லாப்ரடார்கள் மற்றும் உள்நாட்டு இனமான சிப்பிப்பாறை வகை நாய்கள் சிறுநீர் மாதிரிகள் மீதும், காக்கர் ஸ்பேனியல் நாய்கள் வியர்வை மாதிரிகள் மீதும் பயிற்சி பெற்றுள்ளன. இப்போது வரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் தரவுகளின் அடிப்படையில், மோப்பநாய்களின் உணர்திறன் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
பயன்படுத்தப்படும் மாதிரிகள் (சிறுநீர் மற்றும் வியர்வை) வைரஸ் அழிக்கப்பட்ட மாதிரிகள் என்பதால் நாய்களுக்கு தொற்று ஏற்படாது. கொரோனாவின் தன்மையான நிலையற்ற வளர்சிதை மாற்ற பயோமார்க்கரை மட்டுமே கொண்டுள்ளது.’ என்றார்.