செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றியபோது எடுத்த படம்.

மக்கள் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை சிறப்பாக செயல்படுகிறது- பிரதமர் மோடி பேச்சு

Published On 2021-02-06 19:04 GMT   |   Update On 2021-02-06 19:04 GMT
மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தனது கடமையை நீதித்துறை மிகச்சிறப்பாக செய்துள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத்:

குஜராத் ஐகோர்ட்டு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி, நேற்று காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

இந்த விழாவில், நினைவு தபால் தலையை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் நாட்டின் நீதித்துறையை பாராட்டினார். அவர் கூறியதாவது:-

குஜராத் ஐகோர்ட்டு எப்போதும், நாட்டில் உண்மையையும், நீதியையும் பாதுகாப்பதற்காக பணியாற்றி வருகிறது. தனது கடமையாலும், பக்தியாலும் நீதித்துறை அமைப்பையும், ஜனநாயகத்தையும் பலப்படுத்தி உள்ளது.

நமது நாட்டின் நீதித்துறை, மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தனது கடமையை மிகச்சிறப்பாக செய்துள்ளது. தனிப்பட்ட சுதந்திரத்தை நிலை நிறுத்துவதுடன், தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தருணங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் உலகளவில், நமது சுப்ரீம் கோர்ட்டு மிக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை காணொலி காட்சி வழியாக விசாரித்து இருக்கிறது.

நமது அரசியல் சாசனத்தை நிலை நிறுத்துவதில் நமது சுப்ரீம் கோர்ட்டு உறுதியுடன் செயல்படுகிறது என்று ஒவ்வொரு குடிமகனும் கூற முடியும். தனது நேர்மறையான விளக்கங்கள் மூலம் நாட்டின் அரசியல் சாசனத்துக்கு நீதித்துறை வலுசேர்த்துள்ளது.

இந்திய சமுதாயத்தில் சட்டத்தின் ஆட்சி பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தின் அடிப்படையாக இருந்து வருகிறது. நல்லாட்சியின் வேர், நீதியை வழங்குவதில் உள்ளது என்று நமது பண்டைய நூல்கள் சொல்கின்றன. நாட்டில் உலகத்தரம் வாய்ந்த நீதிமுறையை உருவாக்குவதற்கு சட்ட நிபுணர்களும், நீதித்துறையும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News