செய்திகள்
மந்திரி ஈசுவரப்பா

கர்நாடகத்தில் தாலுகா பஞ்சாயத்துகள் ரத்து செய்யப்படும்: மந்திரி ஈசுவரப்பா தகவல்

Published On 2021-02-05 02:36 GMT   |   Update On 2021-02-05 02:36 GMT
கர்நாடகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தாலுகா பஞ்சாயத்து அமைப்பு தேவை இல்லை என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று தாலுகா பஞ்சாயத்துகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது என்று சட்டசபையில் மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய்வாலா உரையாற்றினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 6-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கி நடைபெற்றது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் குமார் பங்காரப்பா எழுந்து பேசும்போது கூறியதாவது:-

நமது நாட்டில் குறிப்பாக கர்நாடகத்தில் 3 அடுக்கு பஞ்சாயத்து நடைமுறை அமலில் உள்ளது. அதாவது கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து ஆகிய நிலையில் பஞ்சாயத்து முறை உள்ளது. இதில் தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்ந்து எடுக்கப்படும் கவுன்சிலர்களுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் கிடைப்பது இல்லை. அதுதேவையற்றதாக உள்ளது. தாலுகா பஞ்சாயத்து அமைப்பால் எந்த பலனும் இல்லை.

அதனால் தாலுகா பஞ்சாயத்து அமைப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை மட்டும் போதும். பல மாநிலங்களில் தாலுகா பஞ்சாயத்து நடைமுறையில் இல்லை. இதை அரசு கவனத்தில் கொண்டு, அவற்றை ரத்து செய்ய உரிய முடிவு எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் 2 அடுக்கு பஞ்சாயத்து முறையை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு குமார் பங்காரப்பா கூறினார்.

ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் நாடகவுடாவும், இந்த கருத்தை ஆதரித்து பேசினார். தாலுகா பஞ்சாயத்துகளை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த பிரச்சினைக்கு பதிலளித்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, "அரசியல் சாசனத்தின் முடிவின்படி கர்நாடகத்தில் 3 அடுக்கு பஞ்சாயத்து நடைமுறை அமலில் உள்ளது. ஒரு மாநிலத்தில் மக்கள்தொகை 20 லட்சத்திற்கும் கீழ் இருந்தால், அங்கு தாலுகா பஞ்சாயத்துகள் இருக்க தேவை இல்லை. இதை அரசியல் சாசனமே அனுமதிக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தாலுகா பஞ்சாயத்து அமைப்பு தேவை இல்லை என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று தாலுகா பஞ்சாயத்துகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மந்திரிசபையில் ஆலோசித்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இதை நடைமுறைக்கு கொண்டுவர அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது சபாநாயகர் காகேரி, "இது முக்கியமான விஷயம். இது பூஜ்ஜிய நேரத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. அதனால் இதுகுறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அதனால் வேறு ஒரு நாளில் இதுகுறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும். முடிந்தால் நாளையே (இன்று) இதுகுறித்து விவாதிக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன்" என்றார்.

அதற்கு மந்திரி ஈசுவரப்பா, "விவாதித்து கால விரயம் செய்வது வேண்டாம். இதுபற்றி மந்திரிசபையில் ஆலோசித்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். அதற்கு மீண்டும் கருத்து தெரிவித்த சபாநாயகர், "தாலுகா பஞ்சாயத்துகளை ரத்து செய்வது என்பது முக்கியமான விவகாரம் என்பதால் இதுகுறித்து கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். இதற்கு நேரம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Tags:    

Similar News