செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கு : சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் இளவரசியின் தண்டனை காவல் நிறைவு பெறுவதால் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் தண்டனை காலம் நிறைவு மற்றும் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தியதால் கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதம் செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5-ந் தேதி (இன்று) விடுதலை ஆவார் என்று பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்றுடன் இளவரசியின் தண்டனை காலம் நிறைவடைய உள்ளது. இதனால் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் இளவரசி, சசிகலா தங்கி இருக்கும் ரெசார்ட்டுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கு 2 நாட்கள் தங்கி இருந்த பின்னர் வருகிற 8-ந் தேதி சசிகலாவும், இளவரசியும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சுதாகரனின் தண்டனை காலம் முடிந்து விட்டது. ஆனால் இன்னும் அபராத தொகையை செலுத்தாமல் உள்ளதால் அவர் விடுதலை ஆவது தள்ளிப்போகிறது.