செய்திகள்
ராகுல்காந்தி, நிர்மலா சீதாராமன்

நாட்டின் வளங்கள் பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்ப்பா? - ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Published On 2021-02-01 22:08 GMT   |   Update On 2021-02-01 22:08 GMT
நாட்டின் வளங்களை பெரும் பணக்கார நண்பர்களுக்கு தாரைவார்ப்பதாக ராகுல்காந்தி கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘‘மக்கள் கையில் பணத்தை கொடுப்பதற்கு பதிலாக, தனது பெரும் பணக்கார நண்பர்களிடம் நாட்டின் வளங்களை தாரைவார்க்க மோடி அரசு திட்டமிடுகிறது’’ என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், ராகுல்காந்தி குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

ராகுல்காந்தி இந்த கருத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை சொல்லிக் கொண்டிருக்கிறார். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை அவர் சொல்கிற அதே பெரும் பணக்காரருக்குத்தான் (அதானி குழுமம்) கொடுத்தார்கள்.

இந்த குற்றச்சாட்டுக்கு இன்றுவரை காங்கிரசால் விளக்கம் சொல்ல முடியவில்லை. விழிஞ்சம் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு அந்த பணக்காரரை காங்கிரஸ் கட்சி ஏன் அழைத்தது என்று ராகுல்காந்தியால் விளக்கம் சொல்ல முடியுமா?

அவரால் பதில் சொல்ல முடியாவிட்டால், தான் சொல்வதே தனக்கு புரியவில்லை என்றோ அல்லது தனக்கு தவறான தகவல் சொல்லப்படுகிறது என்றோ அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

விவசாயிகள் எல்லையில் அமர்ந்து இருக்கிறார்கள். எந்த விவசாயிக்கு எந்த சந்தேகம் இருந்தாலும், அதுகுறித்து பதில் அளிக்க மத்திய வேளாண்துறை மந்திரி மறுத்ததே இல்லை. அவர் விவசாய சங்கங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வு. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு பேசிய பிரதமர், பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எனவே, சந்தேகமும், குழப்பமும் உள்ள விவசாயிகள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News