செய்திகள்
எடியூரப்பா

கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம்: எடியூரப்பா

Published On 2021-02-01 02:02 GMT   |   Update On 2021-02-01 02:02 GMT
மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு இதுவரை அநீதி ஏற்படவில்லை. வடகர்நாடக மாவட்டங்களில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எக்காரணத்தை கொண்டும் அநீதி ஏற்பட அனுமதிக்க மாட்டோம். மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்ளும் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைத்தே தீரும்.

மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்ள கர்நாடகத்திற்கு நிர்வாக தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கோவா முதல்-மந்திரி அரசியல் காரணங்களுக்காக மகதாயி நதிநீர் பற்றி பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் நமது உரிமை விட்டு கொடுக்கப்படாது. அதற்கான பேச்சுக்கே இடமில்லை.

மகதாயி நதிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் கர்நாடகத்திற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மகதாயி நதிநீரை வடகர்நாடக மாவட்டங்களில் மக்களின் குடிநீருக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் குடிநீர் பிரச்சினையில் இடையூறு செய்வது சரியல்ல. மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. என்றாலும், மத்திய மந்திரிகள் மூலமாக மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

எனது தலைமையிலான அரசில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், அதனை சரி செய்து கொண்டு, மக்களுக்காக சிறப்பான ஆட்சியை கொடுக்க தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளும் சரிப்படுத்தி கொள்ளப்படும். அரசின் மீது குற்றச்சாட்டுகள் கூறத்தான் எதிர்க்கட்சிகள் உள்ளன. அவர்களது வேலையை, அவர்கள் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகளுக்கும் வரவேற்பு அளிக்கப்படும். சட்டசபை கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நாளை (இன்று) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் சட்டசபை கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News