செய்திகள்
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை யாராலும் அழிக்க முடியாது - குமாரசாமி
மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை யாராலும் அழிக்க முடியாது என முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு:
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநாடு பாகல்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை அழிக்க தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் திட்டமிடுகிறது. இந்த கட்சி தொண்டர்களால் உருவானது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு மக்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. நாங்கள் மக்களை நம்பி தான் இருக்கிறோம். ஜனதாதளம் (எஸ்) கட்சியை யாராலும் அழிக்க முடியாது. கட்சியை அழித்து விடலாம் என்ற ஆசை ஒருபோதும் நிறைவேறாது.
நான் 2 முறை முதல் மந்திரியாக இருந்துள்ளேன். பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் தான் முதல் மந்திரி பதவிக்கு வந்தேன். நான் முதல் மந்திரியாக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் எதையும், தேசிய கட்சிகளால் கொண்டு வர முடியவில்லை.
விவசாய கடன் ரூ.20 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளேன். மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். காங்கிரஸ், பா.ஜ.க 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் அவகாசம் அளித்துள்ளனர்.
அதுபோல, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க.வின் பி.டீம் என்று எங்கள் கட்சியை கூறுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.