செய்திகள்
ஜனவரி 26ல் நடந்த சம்பவத்தால் நாடே அதிர்ச்சி அடைந்தது- பிரதமர் மோடி
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், அதற்காக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் போராடிய நிலையில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையானது போராட்டத்தின் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.
பேரணிக்கான பாதையில் இருந்து விலகிய ஒரு குழுவினர், டெல்லி செங்கோட்டையில் நுழைந்து, வன்முறையில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த கொடிக்கம்பத்தில் தங்கள் அமைப்புகளின் கொடியை ஏற்றினர். விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஜனவரி 26ம் தேதி செங்கோட்டையில் நடந்த வன்முறை மற்றும் தேசியக்கொடி அவமதிப்பைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது என குறிப்பிட்டார். நாம் வரும் நாட்களை நம்பிக்கையுடனும் புதுமையுடனும் நிரப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், அதற்காக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.