செய்திகள்
குடியரசு தின வன்முறை: இதுவரை 84 பேர் கைது- செங்கோட்டையில் தடயங்கள் சேகரிப்பு
குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை இதுவரை 84 பேரை கைது செய்துள்ளது.
புதுடெல்லி:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் போராடிய நிலையில், குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியின்போது ஒருசில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
குறிப்பாக டெல்லி செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டு, கொடிக்கம்பத்தில் தங்கள் அமைப்புகளின் கொடியை ஏற்றினர். விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையானது, போராட்டத்தின் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது.
டெல்லி பேரணியின்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீசார் இதுவரை 38 எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட விவசாய சங்க தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி, தடயங்களை சேரித்தவண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகள் போராட்டம் இன்று 67வது நாளாக நீடிக்கிறது. அமைதியான வழியில் போராட்டத்தை தொடர வேண்டும் விவசாய சங்க தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். எனினும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், போராட்டக்களங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.