செய்திகள்
சசிகலா

கர்நாடக எல்லையில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு

Published On 2021-01-30 07:35 GMT   |   Update On 2021-01-30 07:35 GMT
தமிழகம் வரும் சசிகலாவுக்கு கர்நாடக எல்லையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் மாரேகவுடா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்குள்ள பண்ணை வீடு ஒன்றில் சசிகலா தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து வருகிற 3 அல்லது 5-ந் தேதி காரில் சென்னை திரும்புவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள். இதையடுத்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.வினர் தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலாவிற்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.

தினகரன் நேரடி கண்காணிப்பில் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் தலைமையில் கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை திரட்டி சசிகலாவிற்கு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் மாரேகவுடா சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மேலும் சசிகலா கார் மூலம் சென்னை செல்கிறார். அவர் சென்னை செல்லும் வழியில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் 66 இடங்களில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். எல்லா இடங்களிலும் 5 நிமிடங்கள் நின்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களிலும் சசிகலா வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் அத்திப்பள்ளி, ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, பர்கூர் ஆகிய 5 இடங்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சசிகலா ஆதரவாளர்கள், அ.ம.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News