செய்திகள்
இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு - டெல்லி, மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடந்தை தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே 150 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் 4 கார்கள் சேதமடைந்தன.
தகவலறிந்த டெல்லி போலீசார் அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடியுள்ளனர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
புலனாய்வாளர்கள் அந்த இடத்திலிருந்து ஒரு கடிதத்தைக் கைப்பற்றி உள்ளனர். அதில் எழுதப்பட்டவை இஸ்ரேல் தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையதா, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதா என்பதை புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அசம்பாவித சூழ்நிலையையும் தவிர்க்க அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. மும்பையில் உள்ள இஸ்ரேல் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.