தேசிய கொடியை அவமதித்தால் பொறுத்து கொள்ள மாட்டோம்- மத்திய அரசு எச்சரிக்கை
புதுடெல்லி:
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டது. 70 தடுப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு விவசாயிகள் டெல்லிக்குள் புகுந்தனர். வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைந்தனர்.
செங்கோட்டை கட்டிடத்தில் நாட்டின் பிரதமர்கள் தேசியகொடி ஏற்றும் கம்பத்தில் தங்களது அமைப்புகளின் கொடியை ஏற்றினர். அதோடு மட்டுமல்லாமல் சீக்கியர்களின் மதக் கொடிகளையும் ஏற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. தேசிய கொடியை அவமதித்தால் பொறுத்து கொள்ள மாட்டோம் என்று எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மந்திரி ஜவடேகர் கூறியதாவது:-
செங்கோட்டையில் தேசிய கொடி அவமதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. தேசிய கொடியை அவமதித்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
வன்முறைக்கு காரணமாக இருந்தவர்கள் மீதும், தூண்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.