செய்திகள்
கடலோர, எல்லை பகுதிகளில் ஒரு லட்சம் என்சிசி படையினர் பணியாற்றுவார்கள்- பிரதமர் மோடி
கடலோரம் மற்றும் அண்டை நாடுகளின் எல்லைகளின் அருகே அமைந்துள்ள 175 மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேர் தேசிய மாணவர் படையில் இணைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லி காரியப்பா மைதானத்தில் இன்று தேசிய மாணவர் படை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். என்சிசி தொப்பி அணிந்து பங்கேற்ற மோடி, என்சிசி படையினரின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
சமூக வாழ்க்கையில், ஒழுக்கத்தைக் கொண்டு வருவதில் தேசிய மாணவர் படையால் முக்கிய பங்களிப்பை அளிக்க முடியும். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்ததுக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு என்.சி.சி. படையினர் உதவி செய்கின்றனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது.
கடலோரம், எல்லைப் பகுதியை ஒட்டிய 175 மாவட்டங்களில் தேசிய மாணவர் படை விரிவாக்கம் செய்யப்படும் செய்யப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒரு லட்சம் என்சிசி மாணவர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கடற்படை மற்றும் விமானப்படை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒரு லட்சம் பேரில், மூன்றில் ஒரு பகுதி பெண்கள் ஆவர். பயிற்சி பெற்ற ஒரு லட்சம் என்சிசி படையினரும் கடலோரம் மற்றும் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகள் கலந்துகொண்டனர்.