செய்திகள்
சசிகலா

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறி இல்லை- மருத்துவமனை நிர்வாகம்

Published On 2021-01-28 06:28 GMT   |   Update On 2021-01-28 06:28 GMT
சசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

சசிகலாவுக்கு திடீரென கடந்த 20-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்ட அவர், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மறுநாள் அவர் கலாசிபாளையா பகுதியில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது நுரையீரலில் தீவிர தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

தற்போதைய நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் ஆக்சிஜனை சுயமாக சுவாசிக்க தொடங்கியுள்ளார். இதனால் செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டது. அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சசிகலாவுக்கு தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை.

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News