செய்திகள்
மொத்த பாதிப்பில் 70 சதவீதம் கொண்ட இரண்டு மாநிலங்கள் -மத்திய மந்திரி தகவல்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களில் 75 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,01,193 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 123 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,53,847 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,73,606 ஆக உயர்ந்துள்ளது. 1,73,740 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிகிச்சையில் உள்ளவர்களில் 75 சதவீதம் பேர் கேரளா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ளனர். புதிய பாதிப்புகளைப் பொருத்தவரை 77.84 சதவீதம் 7 மாநிலங்களில் பதிவாகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்புகளில் 70 சதவீத பாதிப்புகள் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பதிவாகி உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 153 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
147 மாவட்டங்களில் கடந்த 7 தினங்களாக புதிய தொற்று எதுவும் இல்லை. 18 மாவட்டங்களில் 14 நாட்களாகவும், 6 மாவட்டங்களில் 21 நாட்களும், 21 மாவட்டங்களில் 28 நாட்களாகவும் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,13,353 ஆகவும், கேரளாவில் 8,99,932 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.