செய்திகள்
சிறுத்தையை வேட்டையாடி கொன்று சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது
கேரள மாநிலத்தில் சிறுத்தையை கொன்று அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மாங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டிலிருந்து சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, சிறுத்தையின் தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வினோத், குரியகோஸ், பினு, குஞ்சப்பன், வின்சென்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறுத்தையை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.