செய்திகள்
பெண் ஒருவருக்கு பிரதமர் மோடி நில பட்டாவை வழங்கியபோது எடுத்த படம்.

அசாமில் 1 லட்சம் குடும்பங்களுக்கு நில பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி

Published On 2021-01-23 20:39 GMT   |   Update On 2021-01-23 20:39 GMT
அசாமில் 1 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நில பட்டாக்களை வழங்கினார்.
கவுகாத்தி:

வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கிறது. முதல்- மந்திரியாக சர்பானந்தா சோனோவால் உள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அசாமில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற பல லட்சம் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி அசாமில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2016-ம் ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரம் குடும்பங்களுக்கு நில பட்டாக்களை வழங்கப்பட்டன.

இந்த நிலையில் அசாமின் சிவ்சாகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 1 லட்சம் குடும்பங்களுக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார்.‌ அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

அசாம் மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்கள் கிழக்கு கொள்கையின் கீழ் உள்ள கிழக்கு ஆசிய நாடுகளுடனான நமது தொடர்பை விரிவுபடுத்துகிறது. அசாமின் விரைவான வளர்ச்சி நமக்கு மிகவும் முக்கியமானது. சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஆத்மா நிர்பர் பாரதத்தின் முக்கிய பகுதியாக அசாம் வளர்ந்து வருகிறது.

மாநில குடிமக்களுக்கு நில பட்டாக்களை வழங்குவதில் அசாமின் முந்தைய அரசுகள் முன்னுரிமை அளிக்கவில்லை. அசாமில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 6 லட்சம் மக்கள் நில பட்டாக்கள் இல்லாமல் இருந்துள்ளனர்.

ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு இதில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அசாம் மாநில அரசு கொரோனா தொற்றை கையாண்ட விதம் பாராட்டத்தக்கது.

அண்டை நாடுகளின் உதவியுடன் வடகிழக்கு மாநிலங்களில் நீர் போக்குவரத்து இணைப்பை வளர்ப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயற்சிக்கும். குறிப்பாக அசாமில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைப்பதற்கு மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அசாம் மாநில மக்கள்பெரிதும் பயன்படுத்திக் கொண்டனர்.

அதேபோல் கடந்த சில ஆண்டுகளில் 2 கோடி ஜன தன் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன‌.

இவர்களில் பெரும்பாலான பயனாளர்கள் பெண்கள். அவர்களுக்கு இது ஊரடங்கு காலத்தில் பெரிதும் உதவியது.‌

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News