செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது

Published On 2021-01-23 03:06 GMT   |   Update On 2021-01-23 03:06 GMT
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் தோன்றி உலகம் முழுவதையும் தன் வயப்படுத்திய கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் இந்த தொற்று விரைவில் பூமிப்பந்தில் இருந்து வேரறுக்கப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இந்த தடுப்பூசிகள் ஒருபுறம் பயன்பாட்டில் இருந்தாலும், கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முன்பு போல தீவிரமாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் கொரோனா பரிசோதனையும் முக்கியமானது.

நோய் தொற்றியவர்களை விரைவில் கண்டறிந்து அவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துவதன் மூலம் வைரசின் தொற்று சங்கிலி அறுபடும். இதன் மூலம் பரவலும் மட்டுப்படுத்தப்படும்.

எனவே உலக நாடுகளால் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளை இந்தியாவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிசோதனைக்கூடங்களில் இரவு-பகலாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதிகமான பரிசோதனைக்கூடங்கள் மூலம் கொரோனா பரிசோதனைகள் நடந்து வருவதால் இந்தியா தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 10 லட்சத்துக்கு அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறன் பெற்று இருக்கிறது.

இதனால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு உள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை 19 கோடியே 1 லட்சத்து 48 ஆயிரத்து 24 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 8 லட்சத்து 242 பரிசோதனைகளும் அடங்கும்.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தினந்தோறும் பரிசோதனைகள் நடந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த தொற்று சாத்திய விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து இந்த கொடூர தொற்று படிப்படியாக விடைபெற்று வருவது தெளிவாகிறது.

இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 14 ஆயிரத்து 545 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 25 ஆயிரத்து 428 ஆக அதிகரித்து இருக்கிறது.

இதைப்போல மேலும் 163 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 52 பேர், கேரளாவில் 21 பேர், பஞ்சாப்பில் 15 பேர், தமிழ்நாடு, சத்தீஸ்கார், மேற்கு வங்காளத்தில் தலா 9 பேர், டெல்லியில் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்து 32 ஆகியிருக்கிறது. அதேநேரம் நாட்டின் கொரோனா மரண விகிதம் 1.44 சதவீதமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க நாட்டின் மொத்த பாதிப்பில் 96.78 தொற்று மீண்டு விட்டனர். அதாவது 1 கோடியே 2 லட்சத்து 83 ஆயிரத்து 708 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இதனால் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 1 லட்சத்து 88 ஆயிரத்து 688 ஆக குறைந்திருக்கிறது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.78 சதவீதம் ஆகும்.

இந்தியாவில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 3-வது நாளாக 2 லட்சத்துக்கும் குறைவாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Tags:    

Similar News