செய்திகள்
போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ராகிணிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
புதுடெல்லி:
போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை ராகிணி திரிவேதி மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தனக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நவம்பர் 3-ந்தேதி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து நடிகை ராகிணி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். தான் கைது செய்யப்பட்டு 100 நாட்கள் ஆகி விட்டது என்றும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன்னை கைது செய்து இருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு ராகிணி திரிவேதிக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டது.