செய்திகள்
பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் 10-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது மத்திய அரசு

Published On 2021-01-20 09:31 GMT   |   Update On 2021-01-20 09:31 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு 10வது சுற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.
புதுடெல்லி:

டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் இன்று 57-வது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் 9 சுற்றுகளாக பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளது. விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றே தீரவேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு இந்த சட்டங்களை வாபஸ் பெற மறுக்கிறது.

அதேநேரத்தில் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு தயாராக உள்ளது. இதை ஏற்கமாட்டோம், சட்டத்தை முற்றிலும் விலக்கியே ஆக வேண்டும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். இதன் காரணமாக பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு இன்று மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இது 10-வது சுற்று பேச்சுவார்த்தை ஆகும். மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். 

பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து நரேந்திர சிங் தோமர் ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News