செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2021-01-19 10:20 GMT   |   Update On 2021-01-19 10:20 GMT
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் உள்ளிட்டோருக்கு வரும் 2-ம் தேதி வரை காவலை நீட்டித்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. கடத்தல் தங்கத்தின் அன்றைய மதிப்பு 14.82 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், வழக்குடன் தொடர்புடைய தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அதேபோல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் தூதரக ஊழியர் சந்தீப் நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அரசின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சிவசங்கரையும் அமலாக்கத்துறையின் கைது செய்தனர்.

இந்நிலையில், தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள சிவசங்கரின் நீதிமன்ற காவலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என சுங்கத்துறை சார்பில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (பொருளாதார குற்றவியல்) மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் தலைமை ஜூடிசியல்மாஜிஸ்திரேட் நீதிமன்றம் (பொருளாதார குற்றவியல்) கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர், சரித், சந்தீப் நாயர், ரமீஸ், ஜலால், முகமது ஷேபி ஆகியோரின் நீதிமன்றகாவலை பிப்ரவரி 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

நீதிமன்றகாவல் நீட்டிக்கப்பட்டதையடுத்து, வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தங்க கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  
Tags:    

Similar News