செய்திகள்
கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்தது

Published On 2021-01-19 01:51 GMT   |   Update On 2021-01-19 01:51 GMT
கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு :

கர்நாடக அரசு, பசுவதை தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு மேல்-சபையில் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதையடுத்து, பசுவதை தடைக்கு அவசர சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்தது. அதற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இந்த அவசர சட்டம், 18-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கர்நாடகத்தில் அமல்படுத்தப்படும் என்று கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறினார்.

அதன்படி பசுவதை தடை சட்டம் கர்நாடகத்தில் நேற்று அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. ஒருவேளை மாடுகளை கொன்றால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வயதான மாடுகளை வளர்க்க இயலாத விவசாயிகள், அவற்றை அரசின் கோசாலைகளில் விட்டுவிடலாம். 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை உரிய முன் அனுமதி பெற்று கொல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நோக்கத்திற்காக மாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம். ஆனால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மாடுகளை கொண்டு செல்லும் வாகனங்களில் உரிய இடவசதி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 15 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 மாடுகளை விவசாய பணிகளுக்கு கொண்டு சென்றால், அதற்கு எந்த முன் அனுமதியும் தேவை இல்லை.
Tags:    

Similar News