செய்திகள்
பேச்சுவார்த்தை (கோப்பு படம்)

விவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை

Published On 2021-01-15 10:41 GMT   |   Update On 2021-01-15 10:41 GMT
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டம் 2 மாதங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் நடந்த 8 கட்ட பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான 9-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் தொடங்கியது. மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் (பஞ்சாப் எம்பி) ஆகியோர், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

விவசாய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. ஆனால் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையிலும் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை மிக பிரம்மாண்டமாக நடத்த பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இந்த டிராக்டர் பேரணியை தவிர்க்குமாறு இன்றைய பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுக்கொள்வர்கள் என்று தெரிகிறது. ஆனால் விவசாயிகள் தங்களது தொடர் போராட்டத்தில் உறுதியாக இருப்பதால் எத்தகைய முடிவு ஏற்படும் என்பது கணிக்க முடியாதபடி உள்ளது.
Tags:    

Similar News