செய்திகள்
கேரளாவில் பட்ஜெட் தாக்கல்- 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
கேரளாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் கடந்த மாதம் 31-ந்தேதி நடந்தது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின்னர் கடந்த 8ம் தேதி கவர்னர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கவர்னர் உரை முடிந்த பின்பு, மறைந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. நிதி மந்திரி தாமஸ் ஐசக் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பல்கலைக்கழகங்களில் 1000 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.
உயர்கல்வித் துறையில் 800 காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
சுகாதாரத்துறையில் 8000 புதிய பதவிகள் உருவாக்கப்படும்
சமூக நல ஓய்வூதியங்கள் ரூ.100 உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் மாத ஓய்வூதியம் ரூ.1600 ஆக அதிகரிக்கும்.
அனைவருக்கும் மலிவு விலையில் இணையதள வசதி வழங்கும் முதன்மை திட்டத்தின் முதல் கட்டமான கே-ஃபோன் அடுத்த மாதம் நிறைவடையும்.
கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றான ரப்பரின் அடிப்படை விலை ரூ.170 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் வருவாயை உயர்த்த உதவும்.