செய்திகள்
பறவை காய்ச்சல் பரவல்: கர்நாடகத்தில் கோழி இறைச்சிக்கு தடை?
பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் கர்நாடகத்தில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு :
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கோழிகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தட்சிண கன்னடா, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் சில பறவைகள் செத்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவற்றின் மாதிரிகளை கால்நடைத்துறை அதிகாரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கர்நாடகத்திலும் பறவை காய்ச்சல் பரவிவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரி முடிவுகளில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானால், கோழி இறைச்சிக்கு தடை விதிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், "கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் இதுவரை பரவவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. கோழி இறைச்சியை பொதுமக்கள் நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்" என்றார்.