அடுத்தடுத்து 20 செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
பெங்களூரு:
கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு அக்டோபர் வரை செயற்கை கோள் விண்ணில் செலுத்தும் பணியை நிறுத்தி வைத்திருந்த இஸ்ரோ, இந்தாண்டு பல செயற்கைகோளை விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
விண்வெளி ஆராய்ச்சியில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நமது விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) உள்ளது.
கடந்த நவம்பர் 11-ம் தேதி இஸ்ரோ சார்பில் கடைசி செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக திட்டமிட்ட பல செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது . கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பி.எஸ்.எல்.வி. சி.49 மற்றும் சி.50 ஆகிய ஏவுகனை மூலம் இரு செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
நிலுவையில் உள்ள சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும். கொரோனா தொற்று காலத்தில் செயற்கை கோள்கள் செலுத்தும்பணி நிறுத்தப்பட்டிருந்தலும் ஆராய்ச்சி பணிகள் எந்த தொய்வுமில்லாமல் நடந்தது. 2021-ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு புதிய மையில் கல்லாக அமையும் இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.