செய்திகள்
முதல்-மந்திரி பினராயி விஜயன்

தீக்குளித்து இறந்த தம்பதியின் மகன்களுக்கு அரசு உதவி- பினராயி விஜயன் அறிவிப்பு

Published On 2020-12-30 08:35 GMT   |   Update On 2020-12-30 08:35 GMT
கேரளாவில் வீட்டை ஜப்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்த தம்பதியின் மகன்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அதியன்னூர் பஞ்சாயத்து போங்கில் தோட்டம் லட்சம் வீடு காலனியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி அம்பிளி. இவர்களுக்கு ராகுல், ரஞ்சித் ஆகிய 2மகன்கள் உள்ளனர்.

ராஜன் தனது குடும்பத்துடன் வசித்து வந்த குடிசை வீடு ஆக்கிரமிப்பு இடம் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ராஜனை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து அவரது வீட்டை ஜப்தி செய்ய கடந்த 22-ந்தேதி அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்றனர்.

தங்களின் வீட்டை ஜப்தி செய்ய ராஜன் மற்றும் அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் 2பேரும் திடீரென தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசாரின் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கணவன்- மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தங்களது மரணத்திற்கு போலீசார் தான் காரணம் என்று ராஜன் கூறியுள்ளார்.

இதனையறிந்த ராஜனின் மகன்கள் மற்றும் உறவினர்கள் நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரியின் முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

ராஜன் மற்றும் அவரது மனைவி தற்கொலைக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கலெக்டர் நர்ஜூத் போசே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.

ஜப்தி நடவடிக்கையால் தீக்குளித்து தற்கொலை செய்த தம்பதியின் மகன்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்றும், அவர்களது கல்வி மற்றும் அனைத்து செலவுகளையும் அரசு மேற்கொள்ளும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்பதி தற்கொலை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அதிகாரியாக ரூரல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தனது விசாரணையை தொடங்கி இருக்கிறார்.
Tags:    

Similar News