செய்திகள்
உள்துறை அமைச்சகம்

தேவை எனில் இரவு நேர ஊரடங்கு - மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2020-12-28 19:00 GMT   |   Update On 2020-12-29 01:46 GMT
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசியப் பயணத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

அதன்பின் இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தாலும், உலக அளவில் ஏற்படும் பாதிப்பு மற்றும் இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள உருமாறிய கொரோனாவை கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதனால், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நவம்பர் 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 31-ம் தேதி வரை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் கொரோனா தொற்று நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மத்திய அரசு அனுமதி பெற்று இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தலாம் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
Tags:    

Similar News