செய்திகள்
கோப்பு படம்

நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன.31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

Published On 2020-12-28 14:39 GMT   |   Update On 2020-12-28 14:39 GMT
நாடு முழுவதும் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 7.0 அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் புதன்கிழமையுடன் (டிசம்பர் 31) நிறைவடைகிறது.

இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு 8.0 அமல்படுத்தப்பட்ட உள்ளது.

இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கண்டெய்ன்மெண்ட் சோன் எனப்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

மேலும், டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வு 7.0-வில் நடைமுறையில் இருந்த மெட்ரோ ரெயில் சேவை, கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி, திரையரங்குகள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி உள்பட அனைத்தும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதும், உருமாறிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக
மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

Similar News