செய்திகள்
ராஜ்நாத் சிங்

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சி வெற்றி பெறாது- ராஜ்நாத் சிங் பேச்சு

Published On 2020-12-27 22:49 GMT   |   Update On 2020-12-27 22:49 GMT
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
சிம்லா:

மத்திய பா.ஜ.க. அரசு கடந்த செப்டம்பர் மாதம் இயற்றிய 3 வேளாண் சட்டங்களை தீவிரமாக எதிர்த்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

இதை முடிவுக்கு கொண்டு வர  மத்திய அரசு  5 கட்ட பேச்சு நடத்தியும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில் புதிய பேச்சுவார்த்தைக்கு  மத்திய அரசு  அழைப்பு விடுத்துள்ளது. 29-ந் தேதி (நாளை) இந்த பேச்சுவார்த்தையில் பங்குபெற விவசாய அமைப்புகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த தருணத்தில் இமாசல பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவி ஏற்று 3 ஆண்டு நிறைவு அடைந்ததையொட்டி சிம்லாவில் நேற்று மாநில அளவில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காணொலி காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்  விவசாயிகள் போராட்டம்குறித்து கூறியதாவது:-

புதிதாக இயற்றப்பட்டுள்ள  வேளாண் சட்டங்கள்,  விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சி அவர்களை தவறாக வழிநடத்துகிறது.

விவசாயிகளை தவறாக வழிநடத்த மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.

எப்போதெல்லாம் ஒரு சீர்திருத்தம் வருகிறதோ, அப்போதெல்லாம் அது நேர்மறையான முடிவுகளை காட்டத்தொடங்குவதற்கு சில வருடங்கள் ஆகும். 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை அப்போதைய நிதி மந்திரி மன்மோகன் சிங் கொண்டுவந்தபோதாகட்டும், வாஜ்பாய் அரசு கொண்டு வந்தபோதாகட்டும், அவை பலன் அளிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆனது.

அதே போன்றுதான், 4 அல்லது 5 ஆண்டுகள் நாம் காத்திருக்காவிட்டாலும், மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சீர்திருத்தங்கள் நேர்மறையான விளைவுகளை தருவதை நாம் பார்ப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது நாம் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News