செய்திகள்
பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கும் சாலை

குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

Published On 2020-12-27 03:19 GMT   |   Update On 2020-12-27 09:40 GMT
டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர்  நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க, மது பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், வட மாநிலங்களில் வரும் நாட்களில் குளிர் மேலும் தீவிரமடையும் என இந்திய 
வானிலை ஆய்வு மையம்
 எச்சரித்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் குளிர் மேலும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே இருங்கள். வைட்டமின்-சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள். கடுமையான குளிர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் சருமத்தை தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருங்கள். ஆல்கஹால் உடல் வெப்பத்தை மேலும் வெகுவாக குறைத்துவிடும் என்பதால் மது அருந்த வேண்டாம். வீடுகளிலோ அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களிலோ மது அருந்துவது நல்லதல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News