செய்திகள்
டிகே சிவக்குமார்

மந்திரி சுதாகர் இரவுநேர ஊரடங்கு முடிவை எடுத்தது ஏன்?: டி.கே.சிவக்குமார் கேள்வி

Published On 2020-12-26 02:09 GMT   |   Update On 2020-12-26 02:09 GMT
யாருடைய ஆலோசனையும் கேட்காமல் மந்திரி சுதாகர், இரவு நேர ஊரடங்கு முடிவை எடுத்தது ஏன்? என்று டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஒட்டுமொத்த உலமும், கர்நாடகத்தை குறிப்பாக பெங்களூருவை உற்று நோக்குகிறது. இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எடுத்தார். இரவில் மட்டும் தான் வைரஸ் பரவுகிறதா?. அது பகலில் பரவுவது இல்லையா?. மந்திரி சுதாகருக்கு அறிவு கிடையாது. இரவு 11 மணிக்கு மேல் பொதுமக்கள் தெருக்களில் நடமாடுகிறார்களா?. யாருடைய ஆலோசனையும் கேட்காமல் சுதாகர் இரவு நேர ஊரடங்கு முடிவை எடுத்தது ஏன்?.

இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தினால் வைரஸ் பரவாது என்று நிபுணர்கள் யாராவது சுதாகருக்கு ஆலோசனை கூறினார்களா?. இது குறைந்தபட்ச அறிவு சார்ந்த விஷயம். இதில் அறிவியல் இல்லை. பகல் நேரத்தில் சந்தைகள், வணிக பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடுகிறார்கள். அங்கு வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் வழங்க வேண்டும்.

தொழில்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 50 சதவீத உணவகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பெங்களூருவில் தொழில் செய்பவர்களுக்கு அரசு விலக்கு வழங்கியுள்ளதா?. தனக்கு நற்பெயர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் சுதாகர் தனது விருப்பம் போல் முடிவுகளை எடுக்கிறார். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை முடிவுகள் வாபஸ் பெறப்பட்டது என்பதை கணக்கு போட்டு பாருங்கள். இளைஞர்களின் ஆக்ரோஷத்திற்கு அரசு பணிந்துள்ளது. இது அரசின் கடமை.

நமது இளைஞர்களுக்கு மந்திரியை விட அறிவாற்றல் அதிகமாக உள்ளது. எடியூரப்பா ஜாமீனில் வெளியே வந்ததை பார்த்துள்ளோம். பெரிய தலைவர்கள் எல்லாம் அவ்வாறு வந்ததை நான் பார்த்து இருக்கிறோம். என்னை குறை சொல்பவர்களுக்கு காலம் பதில் சொல்லும். இந்த கொரோனா வைரஸ் நீங்கி மக்களுக்கு அமைதி கிடைக்க வேண்டும் என்று இந்த வைகுண்ட ஏகாதசி நாளில் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News